24 ஏப்ரல் 2024

பெங்களூரில் வீடு தேடுவோருக்கு தொடரும் சிக்கல்.. உச்சத்தில் இருக்கும் வீட்டு வாடகைகள்!

1 min read

சமீபத்தில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பெங்களூரில் அதிக வாடகை வசூலிக்கப்பட்டு வருவதாக ஆதாரங்கள் கூறுகின்றன.

இந்தியாவின் சிலிக்கான் வேலி என அழைக்கப்படும் பெங்களூரில் சென்ற ஆண்டு முதலே கணிசமான முறையில் வீட்டு வாடகைகள் உயர்த்தி வந்த நிலையில் இந்த ஆண்டு உச்சத்தை தொட்டுள்ளது.

கோவிட்-19 சமயங்களில் அனைத்து நிறுவனங்களும் அதன் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதித்தது. அதனைத் தொடர்ந்து வெவ்வேறு மாநிலங்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள், சொந்த ஊருக்கு சென்று அவர்களில் வீட்டிலிருந்தே வேலைப் பார்க்கத் தொடங்கினர்.

அச்சமயத்தில் பெருந்தொற்று பயம் காரணமாக வாடகை வீடுகளில் குடியிருந்தவர்களும் காலி செய்து அவர்களின் சொந்த ஊருக்கே சென்று விட்டனர். அதனைத் தொடர்ந்து அனைத்து நகரங்களிலும் வாடகை வீடுகள் பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இந்நிலை மூன்று ஆண்டுகள் வரை தொடர்ந்ததால், வாடகையின் அளவை வீட்டு உரிமையாளர்கள் குறைத்திருந்தனர்.

ஆனால், சென்ற ஆண்டின் பிற்பகுதியில் நாடு முழுவதும் தொற்று குறைந்து, அனைத்தும் இயல்பு நிலைக்கு மாறத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஆண்டு இறுதி முதல் அனைத்து ஐடி நிறுவனங்களும் அனைத்து டெக் நிறுவனங்களும் அதன் ஊழியர்களை அலுவலகம் வந்து பணிபுரிய கேட்டுள்ள நிலையில் அனைவரும் அவர்கள் அலுவலகம் இருக்கும் நகரங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றன.

அதிலும் பெங்களூரில்தான் முக்கிய டெக் மற்றும் சேவை நிறுவனங்களும் தொடர்ந்து இயங்க ஆரம்பித்துள்ளதால், வாடகைக்கு வீடு தேடுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பெங்களூர் குடியிருப்போர் நலச்சங்கமும், வாடகை வீடு உரிமையாளர்கள் சங்கமும் வீட்டின் வாடகையை இரு மடங்கு அதிகரித்துள்ளது. அதிலும் வீட்டு உரிமையாளர்கள் வீடு கேட்டு வரும் இளைஞர்களிடம் அவர்களின் LinkedIn விவரங்களையும் கேட்டு அதன் அடிப்படையில் வீடு தருவதாகவும் வீடு தேடுவோர் கூறிவருகின்றனர்.

வீட்டு உரிமையாளர்களின் கட்டுப்பாடுகள், அதிகப்படியான வாடகையும், வீடு தேடுபவர்களுக்கு மிகவும் அதிக மன அழுத்தத்தை தருவதாக இருப்பதாகவும் மக்கள் கூறி வருகின்றனர்.